Sunday 24 August 2014

அருள்மிகு ஸ்ரீ அனந்தசயனராமர் மற்றும் ஸ்ரீவேணு கோபாலஸ்வாமி திருக்கோயில் தலவரலாறு

அருள்மிகு  ஸ்ரீ அனந்தசயனராமர் மற்றும் ஸ்ரீவேணு கோபாலஸ்வாமி திருக்கோயில்  வேங்கிடாம்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர்


லக்ஷ்மனச்வாமி ஏழு தலை ஆதிசேஷனாக மஞ்சம் அமைக்க  அழகிய சீதா பிராட்டியாருடன் ஆஞ்சநேயர் புடை சூழ ஸ்ரீ ராமர் 18 அடி மூர்த்தியாக கட்சி தருகிறார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சன்னதி கடலுரிலிருந்து வடலூர் செல்லும் மார்க்கத்தில் குறிஞ்சிபடி அருகில் வேங்கடாம்பேட்டையில் உள்ள பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபலசுவாமி சன்னதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் 15ம் நூற்றாண்டில் செஞ்சியை ஆண்ட மன்னரின் சகோதரி வெங்கட்டம்மாள் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது அல்லது திருப்பணி செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்கில் 236 அடி நீளமும் தெற்கு வடக்கில் 129 அடி அகலமும் உடையது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் ருக்மணி சத்தியபாமா சமேதராக அருள்பாலிக்கிறார் . நின்றானாக ஸ்ரீ வேனுகோபலனும், இருந்தனாக பரமபத நாதனான ஸ்ரீ விஷ்ணுவும், கிடந்தனாக ஸ்ரீ அனந்தசயனராமரும் அருள்பாலிக்கின்றனர். மேலும் செங்கமலத்தாயார், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி தனித்தனியாக அமைந்துள்ளது.கருடாழ்வார் ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதிக்கு நேர் எதிரே அமர்ந்து காட்சி தருகிறார்  ஏழு நிலை ராஜ கோபுரம் கொண்ட இத்திருக்கோயிலுக்கு எதிரில் 50 அடி உயர ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் ஏழு கிணறுகளுடன் கூடிய தீர்த்தம் உள்ளது.

கி. பி. 1884 ல் இக்கோபுரம் பழுதுபர்க்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி பகர்கிறது. மேலும் கோபுரவயிலின் கீழேக்காணப்படும் கவிதை மயமான கல்வெட்டு இக்கோபுரம் விஜயநகரத்து மன்னர் காலத்தே கட்டப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறிவிக்கிறது.

" தாறக சோரக்கவி எழுத்தாணி நூறுக்குத் தடங்கல்சூழ்
காறககூத்தின் கீர்தியகள் (அந்தக) சிங்கன் கர்ணனுக்கு
வாறகப்பட்டுப்  பிரிந்தெங்கே யெங்கேவந்து தேடித்தெம்
பாறகப் பி(ஸ )றப்பட்ட னாகப்பன்  (அ) கமோகலைமதியேல் "
  
இத்திருக்கோயில் தல வரலாறு பற்றிய குறிப்புகளை நாம் புராண காலத்திலிருந்து ஆராய்ந்தால் இதிதிருக்கோயிலின் சிறப்பு விளங்கும். அதாவது தனிப்பெரும் அவதார புருஷர் ஸ்ரீ இராமபிரான் தயாபர தர்மமூர்த்தி தர்ம பத்தினியை பிரிந்து  அப்போதைய தென்னாற்காடு காட்டு  வழியே தம்பி இலக்குமனனுடன் சீதாதேவியை தேடி வந்தார்.தற்பொழுது வேங்கடம்பெட்டை என அழைக்கப்படும் இயற்க்கை எழில் மிகுந்த பெருவல பூமியின் சுகந்த அமைதி சூழலைக்கண்டு அங்கு ஒரு நாள் தங்கினார். பலநாட்களாக தூக்கம் இல்லாமல் இருந்த சக்கரவர்த்தி திருமகன் சோர்வை நீக்கி சுகமளிக்கும் அச்சோலைச்சிற்றுரில் தம்பி இலக்குமணன் மடியில் தலை வைத்துப்படுத்து சற்று இளைப்பாறினார்.

அதன்பின்னரும் இலங்கைப்போர் முடித்து ஜெயராமனாக சீதா பிராட்டியுடன் திரும்பி வரும் வழியில் தனக்கு உகந்த அந்த சுகந்த வனத்தை பிரட்டியருக்கு காட்டி அப்பெருமாட்டியுடனும் அனுக்கத்தொண்டன் அனுமனுடனும் ஆதிசேஷ  இளையபெருமாள் மீது அரிதுயில் அரங்கனைப்போல் சேவை சாதித்து அந்த மங்கள பூமியின் மகத்துவத்தை  உலகுக்கு வெளிப்படுத்தினார்.

சைவ வைணவ சண்டை வெளிப்பாடாக இராமபிரான் தங்கிச்சென்ற தில்லையில் அரங்கனாக காட்சி தரும் கோவிந்தராஜபெருமாளின் சிலா ரூபம் கடலிடை ஆழ்த்தப்பட்டது. தில்லை திருசித்ரக்கூடம் வெற்றிடமாக இருப்பதற்கு மனம் பொறாத வீர வைணவர்களின் விருப்பத்திற்கிணங்க பிற்கால பராந்தகசோழன் முயற்ச்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு அரங்கனின் சிலாரூபம் 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது. அனால் அவ்வளவு பெரிய திருமேனி பிரதிஷ்ட்டை செய்ய  எதிர்ப்பு கிளம்பவே தற்போதுள்ள கோவிந்தராஜபெருமாள் தில்லை சித்திரக்கூடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. பேரழகின் அரி துயில் அரங்கனை அனந்த சயன ராமனான பெரிய பெருமாளை சிதம்பரத்திற்கு முன் விடாயற்றிய வேங்கடம்பெட்டை திருத்தலத்தில் அரங்க நிலைப்படுத்தி மகிழ்வெய்தினர் பக்த பெருமக்கள் என்று அறியப்படுகிறது.

தில்லையில் காலைத்தூக்கிநின்றடும் தெய்வத்திற்கு ஒப்பாக கால் மடித்து ஊன்றி நின்று ஊதும் வேய்குழலின் வேணுகோபாலனை பாமா ருக்மணி சமேதராக வேங்கடாம்பேட்டை திருத்தலத்தில் சன்னதி பெருமாலாக்கினர். வடபத்ரசாயி என அவதாரப்புருஷனை  நிலைப்பெறச்செய்தனர். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவைகுண்டவாசர், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய தெய்வங்களை  எழுந்தருளப்பண்ணினர் அக்கால வைணவப்பெருமக்கள். வேங்கடாம்பெட்டை திருக்கோயில் காசி - இராமேஸ்வரம் அக்கால இராஜப்பாட்டையில் இருபுறமும் அன்னச்சத்திரங்கள் ஊர் பெயர்களைக்கொண்டு அமைந்துள்ளது. அதன் பண்டைய சிறப்பையுனர்த்தும் ஏழு நிலை இராஜகோபுரம், 50 அடி உயர உங்கள் மண்டபம் உயர்ந்த சுற்று மதில் என அத்திருக்கோயில் வேங்கடாம்பேட்டையில் பொலிவு பெற்று இருந்துள்ளது.

இத்திருக்கோயில் தல வரலாறு பற்றி புரான செய்தி கூறுவதாவது, பூலோகத்தில் கலியுகம் பிறந்ததும் வட நாட்டில் அதர்மம் பரவியது. அதனால் யுத்தங்கள் ஏற்பட்டு அமைதி குலைந்தது. இதனால் மனம் குலைந்துபோன சடமர்ஷனர் என்ற மகரிஷி அமைதி வேண்டி தென்னாடு வந்தடைந்தார். தென்னாட்டில் பஞ்சக்ருஷ்ணாரண்யம் (திருக்கோவிலூர் பகுதி ) என்ற வனத்தில் அலைந்து திரிந்து அங்கிருந்து தென் கிழக்கு திசையில் வரலானார். வேநிர்க்காலத்தில் நீர் வற்றிக்கிடந்த கருட நதியின் மணலில் கால்கள் சூடுதாளாது தத்தளித்த அவருக்கு தென்கரையோரமாக ஒற்றையடிப்பாதைப்போல் ஒரு நீர் ஊற்று தோன்றியது. அதில் கரையேறி கால் சூட்டை தனித்துக்கொண்ட மகரிஷி நீர் ஊற்றின் பதை தெற்கு  நோக்கி நீள்வதை உணர்ந்து அதன் வழியே நடக்கலானார். தில்லைவனத்தின் வடகோடியிலுள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் அவ்வழி முற்றுபெற்றது. அந்த இடத்தின் அழகையும் - அமைதியினையும் கண்டு மெய்மறந்து - அவ்விடத்தில் தவத்தில் அமர்ந்தார்.

பலகாலம் தவத்திலே திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த எம்பெருமான் தென்றல் - வாடை என்ற காற்றுகளையே சக்கரங்களாகக் கொண்டு நான்கு வேதங்களை குதிரைகளாகவும் - பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் பிராட்டியாருடன் அமர்ந்தவாறு முனிவர் முன் கட்சி அளித்தார். மகரிஷியே, வேண்டும் வரம்கேள் தருகிறேன் என்றார். மகரிஷியோ என்சான்கிடையாக பூமியில் விழுந்து வணங்கி - பெருமானே துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனத்துக்காக மேற்கொண்ட அவதாரங்கள் அனைத்தையும் தனக்கு கட்சியளித்து அருள வேண்டினார். அவ்வாறே பெருமானும் இறங்கி மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம என்ற அவதாரங்களை வரிசையாக காட்சியளித்து வருகையில் ஸ்ரீஇராமவதாரம் வந்ததும் மகிழ்ந்த மகரிஷி ஐயனே ! மானிட உயிர்களின் பொருட்டு - பூலோகத்தில் இராமனாகப்பிறந்து - எத்தனை துன்பங்களையெல்லாம் அடைந்தீர். எத்தனையெத்தனை போர்களை நடத்தி அசுரர்களை வதைத்தீர். அந்த களைப்பெல்லாம் தீர தேவரீர் இளைப்பாற இதுவே சிறந்த இடம் என்றார். அதன்படியே இளையபெருமாள் ஆதிசேஷனாக மாறி மெத்தைவிரித்து படத்தால் குடை பிடித்து தொண்டுபுரிய பிராட்டியும் ஸ்ரீதேவி வடிவிலேயே எம்பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க - பெருமாளும் சயன கோலத்தை ஏற்று அருளினார்.

எம்பெருமாள் ஸ்ரீகிருஷ்ணனாக கோவர்த்தனகிரியோடு தோன்றி காட்சியளிக்க, மகரிஷி - பெருமாளே இந்த மலை எதற்கு என்றார். இது பக்தர்களை கடும் மழையிலிருந்து பாதுகாக்க என்று பெருமாள் திருவாய்மலர்ந்தருளினார். அதற்கு மகரிஷி இந்த மலை இங்கு தேவையற்றது. தங்கள் வெய்ங்குழலோசையிலே பிரபஞ்சத்தைஎல்லாம் மயக்கி பாக்திபரவசத்தையூட்டிய ஜெகன்மோகன பால கோபாலகிருஷ்ணனாக காட்சித்தர வேண்டுமென்று வேண்டினார். எம்பெருமானும் அவ்விதமே ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேனுகோபலனாக நின்று கட்ச்யளித்தார். இந்த இரண்டு திருக்கோலங்களையும் இவ்வ்லயத்தில் நம்மால் காண முடிகிறது.
மேலும் இத்திருக்கோயிலின் வரலாறு பக்கத்து ஊரின் பெரியவர் ஒருவர் கூறியதைக்கேட்டால் மிகவும் பிறமிப்பாக உள்ளது. அதாவது இந்த ஊரின் பழைய பெயர் அறவாயில். அறம் தழைத்தோங்கிய ஊர். காட்டுப்பகுதியாக இருந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் சைவ வைணவ மோதல்களின் வெளிப்பாடாக யாதவர்களும் வைணவ அந்தணர்களும் குடியேறி இருக்கிறார்கள். யாதவர்கள் செஞ்சி மன்னன் தேசிங்கு ராஜனுக்கு தொடர்புள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். யாதவர்கள் இந்த ஊரில் மட்டுமின்றி சுற்றி உள்ள ஊர்களிலும் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்வுக்கு திருக்கோயில்கள் அமைத்து வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள்.

இவ்விதமாக யாதவர்கள் அறவாயில் கிராமத்தில் பெரியதொரு கோவிலை நிர்மாணித்து  பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேனுகோபலசுவமியை பிரதிஷ்ட்டை செய்து ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ வைகும்ண்ட வாசர் , ஆழ்வார்கள் உடையவர் என மற்ற மூர்த்தங்களை எழுந்தருளப்பன்னியுள்ளனர். ராஜகோபுரத்திற்கு எதிரே 50 அடி உயர ஊஞ்சல் மண்டபம் , நான்கு ரத வீதி , 2 அடுக்கு மதில்சுவர்  தேர் நிலை என சிறப்பானதொரு கோவிலாக அமைத்திருக்கிறார்கள். வெங்கட்டம்மாள் என்பவர் தலைமையில் இத்திருக்கோவில் நிறுவப்பட்டதால் இந்த ஊர் வேங்கடாம்பேட்டை என வழங்கப்படுகிறது.

அந்த முதியவர் கூறியதிலிருந்து ஆங்கிலேயர்கள் காலம் வரை அதாவது 1947 வரை ஸ்ரீ வேனுகோபலசுவமி திருக்கோயிலில் சிறப்பானதொரு பூஜை நடைமுறையில் இருந்திருக்கின்றது. ஸ்ரீ வேணுகோபாலன், தாயாருக்கு தங்க உற்சவர் சிலைகள் இருந்ததாகவும் 15 நாட்கள் ஊஞ்சல் உற்சவத்தில் காலை வேளையில் சூரிய கிரணங்கள் பட்டு பெருமாள் தாயார் பார்ப்பதற்க்கு   கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்  என்கிறார். தினசரி பூஜைகளுடன் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதாவது 4 கி. மீ . வடக்கில் அன்னதான  சத்திரம் தங்கும்  விடுதி அமைத்து எந்த நேரமும் அன்னதானம் நடைபெற்று வந்திருக்கின்றது. அதனால் இந்த ஊர் இன்றளவும் சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக களஞ்சியங்களும் அதற்க்கு எல்லா திசைகளிலிருந்தும் விவசாயிகள் அறுவடையின் போது கட்டளைகளாக தானியங்களை வழங்கி இருக்கிறார்கள். ஊரில் 400 குடும்பங்கள் இருந்ததாகவும் தேவதாசி வம்சத்தினர் இருந்ததாகவும் தெரிகிறது. சுற்றுப்புற ஊர்களுக்கு இந்த ஊர் வணிகத்திற்கான சந்தையாகவும் நகரமாகவும் இருந்திருக்கின்றது. 

முன்பு பார்த்த சைவ வைணவ மோதல்களின் வெளிப்பாடாக வடிவமைக்கப்பட்ட 18 அடி நீல இராமபிரான் அறவாயில்   கிராமத்திற்கு மேற்க்கே பூமியில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.அந்த திருமேனி ஏர் உழும்போது கலப்பையில் தட்டுப்பட்டு இராமபிரான் சயனித்த தலத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இதுதான் எம்பெருமான் திருஉள்ளம் .

இவ்வளவு  சிறப்பு வாய்ந்த இத்திருக்கொவிலினை 20ம் நூற்றாண்டில் ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி, ஸ்ரீசெங்கமலத்தாயார்  சன்னதி, ஸ்ரீ ஆண்டாள் சன்னதி அனைத்தும் அடியோடு அகற்றப்பட்டு புதிதாக பழைய அளவின்படி அதே தோற்றம் மாறாது ஜெர்மன் நாட்டில் ஹம் நகரில் உள்ள இந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய கர்த்தர் ஸ்ரீ வித்யா  பூக்ஷனம் சிவ ஸ்ரீ V.A.S பாஸ்கர சுவாமிகளால் புணரமைக்கப்பட்டு  02.02.2009 அன்று குடமுழுக்கு விழ நடைபெற்று நித்தியபடி பூஜை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இன்னும் செய்யப்படவேண்டிய ராஜகோபுர திருப்பணி, சுற்றுமதில் திருப்பணி,மீதமுள்ள மண்டப திருப்பணி இவைகளை நிறைவேற்ற எண்ணி சென்னை இந்து சமய அறநிலையத்துறை   ஆணையர் செமு.நட.ந.க.எண். 55682/2010/ஒய்1 நாள்  07.06.2011 அனுமதியின்படி எழுநிலை ராஜகோபுரம்  பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணியையும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் செமு.நட.ந.க.எண் 45404/2011/ஒய்6 நாள் 26.06.2012 அனுமதியின்படி மதில்சுவர் பழுதுபார்த்து புதுப்பித்தல் திருப்பணியையும் ஜெர்மன் சிவ ஸ்ரீ V.A .S பாஸ்கர சுவாமிகள் அவர்கள் தலைமயில்  ஓரிரு பக்தர்கள்,   ஒத்துழைப்போடு உபாயமாக திருப்பணி நடைபெற்று வருகிறது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பழமொழி. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பழமையான அபூர்வமான வடிவில்  எம்பெருமான்   எழுந்தருளியுள்ள இத்திருக்கொவிலின் திருப்பணிக்கு பக்தர்கள் மனது வைத்தால் பணி செவ்வனே முடியுறும். ஆதலால் பக்தர்கள் அதிசய அனந்தசயன ராமரையும், பாமா ருகம்ணி சமேத வேணுகோபால சுவாமியையும் தரிசித்து பிறவிப்பயனை அடையவேண்டும். தங்களால் இயன்ற உதவியை திருப்பணிக்கு செய்ய வேண்டும்  என்பதே இப்போதுள்ள நமது அருட்பணி. எம்பெருமான் அருள்பெற அனைவரையும் அழைக்கிறோம்.

எம்பெருமான் திருஉள அருட்படி  ஸ்வாமிஜியின்  அருளாசியுடன் சமர்ப்பிப்பது, 

இரவிச்சந்திரன் 
கைபேசி : 9080365975